தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (Sowcar Janaki) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருடைய மறைவு தென்னிந்தியத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சௌகார் ஜானகியின் திரையுலக பயணம்: கடந்த 1950ஆம் ஆண்டு வெளியான ‘சௌகார்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைக் குறிக்கும் விதமாக இவரது பெயருக்கு முன்னால் ‘சௌகார்’ அடைமொழியாக இணைந்தது. தமிழ் மற்றும் பிற மொழி சினிமாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களைத் தாண்டி 300-க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துத் திறமை முத்திரைப் பதித்துள்ளார். கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.













