இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் தா. பாண்டியன் இன்று காலமானார். நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா. பாண்டியன் இன்று காலமானார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவுடன் அதிகமாக அரசியல் பணியாற்றியவர் தா.பாண்டியன்.
இவரது மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தா.பாண்டியனின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகுந்த துயருற்றேன்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக தன் பணி வாழ்வை தொடங்கியவர் தா.பாண்டியன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில், வடசென்னை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 6 ஆண்டு காலத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பு வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ‘ஜனசக்தி’ என்ற தினசரி நாளிதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
பல தசாப்தங்களாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் மறக்க முடியாததாகவே இருக்கும்.
அவருடைய மறைவு, தமிழக மக்களுக்கும் குறிப்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்”.
இவ்வாறு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.













