Latest News
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா… கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்…!
வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற மாதா பேராலயத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி இருக்கின்றது.
இயேசுவின் தாயாக கருதப்படும் மாதா தன் கையில் குழந்தையான இயேசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் இருக்கின்றது. இந்த தளம் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயர் தம்புராஜ் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து ஆவே மரியா என்று முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தார்கள். திருவிழாவை ஒட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த திருவிழா செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இந்த விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளில் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறும். பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்திற்கு தேர் பவனி வந்தடையும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7:30 நடைபெறுகின்றது.