பழைய மொபைல், கணினிகளை தூக்கி எறியாதீர்கள் – அதில்தான் தங்கம் இருக்கிறது!

பழைய மொபைல், கணினிகளை தூக்கி எறியாதீர்கள் – அதில்தான் தங்கம் இருக்கிறது!

நம்மில் பலர் பழைய மொபைல் போன் அல்லது பிசி, லேப்டாப் வேலை செய்யாமல் போனவுடன் உடனே குப்பைக்கு தூக்கி எறிவோம். “இதில் என்னதான்  இருக்க போகுது ” என்று  அலட்சியமாக தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அந்த சின்ன சின்ன சிப் (chips), சர்க்யூட் போர்டு (circuit board), கனெக்டர்கள் (connectors) என அனைத்திலும்  நிஜமாகவே  தங்கம் ஒளிந்து உள்ளது  .

ஏன் தங்கம்? காரணம் எளிது – தங்கம் எளிதில் கெடாது, மங்காது, மின்சாரத்தை மிக சிறப்பாக கடத்தும். அதனால்தான் மொபைல், கணினி போன்ற சாதனங்களில் உள்ள முக்கிய பின்கள், கனெக்ஷன்களில் தங்கம் பூசப்பட்டிருக்கும். ஒரு மொபைலுக்குள் சில மில்லிகிராம் தங்கம் தான் இருக்கும். ஆனாலும் உலகம் முழுக்க பில்லியன் கணக்கில் சாதனங்கள் உள்ளதால், “மின்னணு கழிவு மறுசுழற்சி (e-waste recycling) மூலம் பெரிய அளவிலான தங்கம் கிடைக்கிறது. 

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது “நகர்ப்புற சுரங்கம்(Urban Mining)” என்று அழைக்கப்படுகிறது. நிலத்திலிருந்து தங்கம் எடுப்பது போல, நகரங்களில் பழைய மொபைல், பிசி போன்ற சாதனங்களிலிருந்து தங்கம் மீட்கப்படுகிறது. ஒரு மில்லியன் மொபைல்களை உருக்கினால் கிலோக் கணக்கில் தங்கம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் இது வீட்டு வேலை அல்ல. பழைய மொபைலில் இருந்து தங்கம் எடுக்கும் முறை இரசாயன செயல்முறை தேவைப்படும். பாதுகாப்பு வசதி இல்லாமல் முயற்சித்தால் ஆபத்து. அதனால்தான், இதை அதிகாரப்பூர்வ “மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்கள்” (e-waste recycling centers)-ல மட்டுமே செய்கிறார்கள்.

நாம் செய்யக்கூடியது என்ன? பழைய மொபைல், கணினி, லேப்டாப் எதையும் தூக்கி எறியாமல், அதிகாரப்பூர்வ, “மின்னணு கழிவு மறுசுழற்சி மையங்களில் ” ஒப்படைக்க வேண்டும். இது சுற்றுச்சூழலையும் காப்பதோடு, மறைந்திருக்கும் தங்கம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்களையும் மீட்டெடுக்க உதவும்.

அடுத்த முறை உங்கள் மொபைல் வேலை செய்யாமல் போனால், அதை குப்பையில் போடாதீர்கள். யாருக்குத் தெரியும், உங்கள் கையிலேயே ஒரு தங்கச் சுரங்கம் இருக்கலாம்!