ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் காணொளித் தளமான யூடியூப்பில் (YouTube) போதிய வரவேற்பு கிடைக்காத விரக்தியில், இளைஞர் ஒருவர் தனது நவீன ஸ்டూடியோவிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கார்வா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான விநாயக் பிரஜாபதி என்ற இளைஞர், தனது டிஜிட்டல் தளத்தை பிரபலப்படுத்துவதற்காக குடும்பச் சொத்துக்களை விற்று விலையுயர்ந்த கணினிகள் மற்றும் ஸ்டூடியோ உபகரணங்களை வாங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை அன்று, தான் எதிர்பார்த்த அளவிற்கு பார்வைகள் (Views) கிடைக்காத விரக்தியில் அவர் ஸ்டூடியோவிற்கு தீ வைத்ததில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாகின.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விநாயக் பிரஜாபதி கடந்த சில மாதங்களாக ஒரு காணொளித் தளத்தைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்தது. அதில் மிகச் சிறந்த தரத்துடன் உள்ளடக்கங்களை (Content) வழங்க வேண்டும் என்பதற்காக, நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட கேமராக்கள் மற்றும் மின் விளக்குகளுடன் கூடிய தனி அறையை அவர் அமைத்திருந்தார். இதற்காகத் தனது குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை விற்று முதலீடு செய்திருந்தார். இதன் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்டி விடலாம் என்பதே அவரது லட்சியமாக இருந்துள்ளது.
இருப்பினும், அவரது தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் இணையப் பயனர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விநாயக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தனது ஸ்டూடியோவிற்கு அவரே தீ வைத்துள்ளார். தீ மளமளவெனப் பரவியதால் அங்கிருந்த அனைத்து மின்னணு சாதனங்களும் எரிந்து போயின. அச்சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்த அவரது குடும்பத்தினர் இரும்பு கதவுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்ததும் விநாயக் அங்கிருந்து தப்பியோடினார். மறுநாள் அவரைத் தேடிப் பிடித்த உறவினர்கள், அவரது மனநிலையைக் கருத்தில் கொண்டு ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சமூக வலைதளப் புகழுக்காகத் தனது எதிர்காலத்தையே பணயம் வைத்து, விபரீத முடிவெடுத்த இளைஞரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.









