ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை என்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ ஐ.பி.எல்.போட்டிகளை தள்ளிவைப்பதாக அறிவித்த 10 நாட்களுக்கு முன்னதாக எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறோம். 3 அல்லது 4 மாதங்கள் கழித்து போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சர்வதேசத் தொடர்கள் பாதிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.







