தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர் தனுஷ். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘கர’ (Kara) திரைப்படம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்வின் ஒரு பகுதியாக, மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தனுஷை நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில் சினிமா, தனிப்பட்ட கொள்கைகள் மற்றும் பழைய நினைவுகள் எனப் பல சுவாரசியமான விஷயங்களை தனுஷ் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
நேர்காணலின் போது கே.எஸ்.ரவிகுமார், “கமல் சாருக்கு ‘உலகநாயகன்’ பட்டத்தைக் கொடுத்தேன். உங்களுக்கு ஐசரி கணேஷ் சார் ‘கலை அரசன்’ பட்டம் கொடுத்துள்ளார். அஜித்தும் கமலும் இதுபோன்ற பட்டங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். உங்களுக்கு இதில் ஏதேனும் ஆட்சேபனை உண்டா?” எனக் கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த தனுஷ், “ஆமாம் சார், எனக்கும் இதில் ஆட்சேபனை உள்ளது. என்னை தனுஷ் என்று கூப்பிட்டாலே போதும், அதுதான் எனக்குப் பெரிய மகிழ்ச்சி” எனத் தனது கொள்கையைத் தெளிவுபடுத்தினார்.

தேசிய விருது படங்களை விட கமர்ஷியல் ‘மாஸ்’ படங்களை இயக்குவதும் நடிப்பதும் தான் எனக்குப் பிடிக்கும் என தனுஷ் ஓப்பனாகக் கூறினார். தான் ஒரு இயக்குநராக இருக்கும்போது ‘கரடு முரடான ஆளாக’ இருப்பேன் என்றும், எதற்கும் பயப்படாத தான் தனது மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நேர்காணல் தனுஷ் ரசிகர்களிடையே தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தனது சினிமா பயணத்தில் ‘பொல்லாதவன்’ படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசினார். “ஆரம்பக் காலத்தில் என்னை ‘ஒல்லி பிச்சான்’ என்று பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் ‘பொல்லாதவன்’ படத்தில் சட்டையை உதறிவிட்டு முதன்முறையாக உடற்கட்டுடன் நின்றபோது கிடைத்த அந்த கைதட்டல்களை என்னால் மறக்கவே முடியாது. அது என் அடையாளத்தையே மாற்றிய படம்” எனத் தெரிவித்தார். ‘கர’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்த நேர்காணல் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.













