கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் வெளியாகி மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்று இருந்தது “இந்தியன்” முதல் பாகம். அதே எதிர்பார்ப்போடு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது “இந்தியன் – 2”.
லைக்கா புரொடக்ஷன்ஸ் படத்தினை தயாரித்திருக்க , அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இரண்டு லிரிக்கல் வீடியோக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மிக விமர்சியாக நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்க கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் மாணவ – மாணவியரின் கூட்டம் அலைமோதியதாம் .
“ஜெய்லர்” படத்தின் இயக்குனர் நெல்சன், கமல்ஹாசனின் முந்தைய வெற்றி படமான “விக்ரம்” படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பங்கேற்று விழா மேடையை அலங்கரித்தனர்.

“தக்-லைஃப்” பட சூட்டிங்கிலிருந்து நேராக வந்ததால் தாமதமானதாக சிம்பு மேடையில் பேசும்போது கூறியிருந்தார். குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கப்படவும் இல்லையாம், அதேபோல குறித்த நேரத்தில் நிகழ்ச்சி முடிவடையவில்லையாம்.
விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள் எல்லாம் நிகழ்ச்சி முடிந்ததும் தங்களது காரில் ஏறி சொகுசாக பயணிக்க சாமானியர்களின் கதி தான் அல்லோலபட்டதாம். மாலை ஆறு மணிக்கு முன்னரே கூட்டம் கூட, விழா முடிய நள்ளிரவு வரை ஆனதாம்.
நிகழ்ச்சியை காண வந்த “இந்தியன் – 2” தாத்தாவின் ரசிகர்களுக்கு சரியான முறையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது தண்ணீருக்காக தவித்தவர்கள் தான் ஏராளம் எனவும் ஆதங்கப்பட்டு இருந்தார் அவர்.







