தமிழ் நாட்டையே சமீபத்தில் உலுக்கியது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம். சென்னை பெரு நகரத்தின் முக்கிய பகுதியில் வைத்து இந்த கொலை சம்பவம் நடந்ததையடுத்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை. இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் காவல் துறையினரிடமிருந்து தப்ப முயன்றததால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று அதிகாலை இந்த என்கவுண்டர் நடந்தது. இந்நிலையில் இந்த என்கவுண்டர் குறித்து தமிழகத்தின் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது என்கவுண்டர் குறித்த சந்தேகம் இருப்பதாக சொல்லியிருந்தார்.

என்கவுண்டர் குறித்து பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி எதற்காக காவல் பிடியிலிருந்து தப்பி ஓட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இந்த கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகமும் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினர் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக நினைக்கப்படுவதால் ஏதோ உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என்றார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை நியாயமாகவும், துரிதப்படுத்தவும் திமுக அரசை தான் வலியுறுத்தப்போவதாகவும் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.













