தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் மணிகண்டன். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் உற்றுநோக்க வைத்த அவர், ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில், மணிகண்டனின் அடுத்தத் திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
‘ஜே.பேபி’ (J.Baby) திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுக்களைப் பெற்ற இயக்குநர் சுரேஷ் மாரி, தனது அடுத்தப் படத்தில் மணிகண்டனை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். சுரேஷ் மாரி ஏற்கனவே இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் படமான ‘ஜே.பேபி’ ஒரு எமோஷனல் டிராமாவாக ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், மணிகண்டனுடன் அவர் இணையும் இந்தப் படமும் ஒரு அழுத்தமான கதையம்சம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிகண்டன் தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையில் பிரதிபலிப்பதில் அவர் கில்லாடி. அதேபோல் சுரேஷ் மாரியும் எதார்த்தமான வாழ்வியலைப் படமாக்குவதில் வல்லவர். இந்த இரண்டு திறமையான கலைஞர்கள் ஒன்றிணையும் போது, அது தமிழ் சினிமாவில் மற்றொரு தரமான படைப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. ‘குட் நைட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டனின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே வர்த்தக ரீதியாகவும் அதிகரித்துள்ளது.













