தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது.
தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் பற்றிய விவரத்தை தினமும் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இன்று வெளியான தகவலின் படி 121 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 121 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 103 பேர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 673 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேனி, ஈரோடு மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழகத்தில் 1128 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 7093 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 101,874 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







