நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் தன்னுடைய கட்சி அலுவலகமாக செயல்படும் வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை18 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனை பிரதமர் மோடி நேற்றிரவு தொலைக்காட்சியில் தோன்றி ஊரடங்கை அறிவித்தார். மேலும் கொரோனா நிவாரணத்துக்காக 15000 கோடிகள் ஒதுக்கப்படும் என அறிவித்தார். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு என்னென்ன வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும் என்பதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மோடியின் தொலைக்காட்சி பேச்சுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கமலின் இந்த டிவீட்டுக்கு ஆதரவுகளும்ம் எதிர்ப்புகளும் எழுந்தது. இந்நிலையில் தற்போது ‘இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்’ எனத் தெரிவித்துள்ளார்.









