இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் அதை எதிர்கொள்வது குறித்து நடிகர் விவேக் ஒரு யோசனை கூறியுள்ளார்.
சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதாகவும் 40 பேருக்கு மேல் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோய் வருமுன்னே காப்பதே சிறந்தது என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக், கொரோனா பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ‘கொரோனா வைரஸ் காற்றால் பரவக்கூடிய வைரஸ் அல்ல, ஒருவருக்கொருவர் கை கொடுப்பது மற்றும் தொடுதல் மூலமாக பரவுகிறது என மருத்துவர்கள் சொல்கின்றனர். அதனால் மக்கள் கைகொடுப்பதற்கு பதிலாக கையெடுத்து கும்பிடும் பழக்கத்தைக் கடைபிடியுங்கள்’ எனத் தெரிவித்தார்.









