விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம், கடந்த சில ஆண்டுகளாகவே சட்டச் சிக்கல்களிலும் நிதி நெருக்கடிகளிலும் சிக்கி வெளியீட்டைத் தள்ளிப்போட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், ஜூன் 15-ம் தேதிக்குள் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அந்த கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், நிதி சார்ந்த நடைமுறைகளைச் சரிசெய்யவும், படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவும் கூடுதல் அவகாசம் கோரி இயக்குனர் கவுதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் அவகாசம், படக்குழுவினர் நிலுவையில் உள்ள நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தீர்த்து, வெளியீட்டுக்கான இறுதிப் பணிகளை முடிக்க ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னதாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இது படக்குழுவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், படத்தை வெளியிடும் போது நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதையும், இதற்காக நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளரின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீண்ட நாட்களாக இப்படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்டு பல தடைகளைத் தாண்டி வரும் இப்படம், ஜூலை 31-க்குள் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு திரைக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படக்குழுவின் தரப்பில் இருந்து இன்னும் சில இறுதி வணிக ரீதியான ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தாக வேண்டிய நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் விக்ரமின் இந்த ஸ்பை திரில்லர் ரசிகர்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.













