தமிழ் இசைத்துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனின் நேர்காணல் குறித்து, பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் (James Vasanthan) மிகவும் காட்டமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஸ்வாகதா கிருஷ்ணனின் அந்தப் பரபரப்பு பேட்டியைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பெரிய அளவில் பரப்ப வேண்டும்: ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்கள் இருந்தது குறித்தும், அங்கு பெண்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் பேசியிருந்தார். இந்தப் பதிவைப் பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன், “இதைப் பெரிய அளவில் கொண்டு செல்லுங்கள்” (Spread it big!) என்று மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், பல இளம்பெண்கள் இன்னும் இது போன்ற அவமானங்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
காவல்துறை கைது செய்ய முடியும்: பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற அந்த நபர் யார்? என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்தப் பெயரைக் கூறச் சொல்லி நாம் ஸ்வாகதாவை வற்புறுத்த முடியாது என்றாலும், அவர் கொடுத்துள்ள குறிப்புகள் மிகத் தெளிவானவை என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். நேர்காணலின் பின்னூட்டங்களிலேயே அந்த நபர் யார்? என்பதை மக்கள் கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “காவல்துறை அந்த இசையமைப்பாளரைச் சில நிமிடங்களில் கண்டுபிடித்துக் கைது செய்ய முடியும்” என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இசைத்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் பலருக்கு மத்தியில், இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்தத் துறைக்கும் அவமானத்தைத் தேடித்தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.













