திரையுலகில் நடிகைகள் மற்றும் மாடல்கள் மீது அவ்வப்போது மோசடி புகார்கள் எழுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிர வைக்கும் வகையில் ஒரு பல கோடி ரூபாய் மோசடி புகார் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அசு ரெட்டி மீது, சுமார் 9.35 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCS) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லண்டனில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் தர்மேந்திரா என்பவர் அளித்த புகார், கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அசு ரெட்டி தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2018 முதல் 2025 வரையிலான ஏழு ஆண்டுகளில் சிறுகச் சிறுக சுமார் 9 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தைப் பறித்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பணம் மட்டுமன்றி, 5 கிலோ தங்கம், சொகுசு கார்கள் மற்றும் பிளாட்களையும் தர்மேந்திராவிடமிருந்து அசு ரெட்டி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்கிற நம்பிக்கையில் இவ்வளவு பெரிய தொகையை அசு ரெட்டியிடம் தர்மேந்திரா கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், தற்போது திருமணத்திற்கு அசு ரெட்டி மறுப்பதோடு, பணத்தைத் திருப்பிக் கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அசு ரெட்டியின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் அவர் வாங்கிய சொத்துக்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் பல கோடி ஃபாலோயர்களைக் கொண்ட அசு ரெட்டிக்கு, இந்த வழக்கு மிகப்பெரிய கரியர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாப்பிள்ளையைத் திருமண ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்துள்ள இந்தப் புகார், தற்போது சமூக வலைதளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக மாறியுள்ளது.













