தளபதி விஜய் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான எமோஷனல் படமாக அமைந்தது ‘புதிய கீதை’. இந்தப் படத்தின் இயக்குநர் ஜெகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்தப் படம் உருவாவதற்கு முன்பு நடந்த பல சுவாரஸ்யமான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் கதையை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் ஜெகன் சொல்லியிருக்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் எஸ்.ஏ.சி-க்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விஜய்யின் சாரதி கதாபாத்திரம் சுடுகாட்டில் இருந்து வருவது போல ஜெகன் எழுதியிருந்தார். இதைக் கேட்டதும் டென்ஷனான எஸ்.ஏ.சி, “விஜய் மாதிரி ஒரு பெரிய ஸ்டாரை முதல் சீன்லயே செத்துப்போன மாதிரி காட்டினா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க” எனச் சொல்லி கதையை அப்படியே நிராகரித்துவிட்டார். இதனால் ஆரம்பத்திலேயே படத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை விழுந்தது.
தன் தந்தை நிராகரித்த கதையை முதலில் கேட்கவே விஜய் மறுத்துவிட்ட சம்பவம் தான் இதில் ஹைலைட்.
அதன் பிறகு ஒளிப்பதிவாளர் பிரியன் மூலமாக விஜய்யைச் சந்திக்கும் வாய்ப்பு ஜெகனுக்குக் கிடைத்துள்ளது. விஜய்யைச் சந்தித்தபோது அவர் சொன்ன முதல் விஷயம், “எங்க அப்பா கதையை வேணாம்னு சொல்லிட்டாரே, அப்புறம் ஏன் என்கிட்ட வந்தீங்க? அவர் சொன்னா கரெக்டா தான் இருக்கும்” எனச் சொல்லி கதையைக் கேட்காமலேயே மறுத்துள்ளார். ஆனால் ஜெகன் விடாப்பிடியாகக் கதையை முழுவதுமாகச் சொல்லியிருக்கிறார்.

கதையைக் கேட்ட விஜய்க்கு அந்தப் பாசிட்டிவ் அப்ரோச் ரொம்பவே பிடித்துப் போனது. “கதை நல்லா இருக்கு, நீங்க இன்னொரு முறை அப்பாவைப் போய் பாருங்க” என விஜய் கிரீன் சிக்னல் கொடுத்தார். மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகரைச் சந்தித்த ஜெகன், அவர் சொன்ன மாற்றங்களைச் செய்யச் சம்மதித்தார். அதாவது விஜய் கதாபாத்திரம் படத்தின் ஆரம்பத்திலும் சாகக்கூடாது, கிளைமாக்ஸிலும் சாகக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.
ரசிகர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு எஸ்.ஏ.சி செய்த அந்த மாற்றங்களுக்குப் பிறகுதான் ‘புதிய கீதை’ உருவானது.
சுடுகாடு காட்சியைக் கதையில் இருந்து தூக்கிவிட்டு, பாசிட்டிவான ஒரு கிளைமாக்ஸை ஜெகன் உருவாக்கிய பிறகுதான் படப்பிடிப்புத் தொடங்கியது. அப்போது ‘கீதை’ எனப் பெயர் வைக்கவும் சில எதிர்ப்புகள் வந்ததாம். அதன் பிறகுதான் படத்திற்கு ‘புதிய கீதை’ எனப் பெயர் மாற்றப்பட்டது. தளபதி விஜய் தனது தந்தையின் முடிவுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
இன்று தளபதி விஜய் அரசியலில் பிசியாக இருக்கும் வேளையில், அவரது பழைய படங்களின் மேக்கிங் குறித்த இத்தகைய தகவல்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றன. குறிப்பாக எஸ்.ஏ.சி-யின் சினிமா சென்ஸ் அந்த காலத்திலேயே எவ்வளவு ஷார்ப்பாக இருந்தது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவேளை அந்த சுடுகாடு காட்சியுடன் படம் வந்திருந்தால் ரசிகர்களின் ரியாக்ஷன் வேறாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.













