தென்னிந்திய சினிமாவின் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிஸியாக இருக்கும் அல்லு அர்ஜுன், அடுத்ததாக மலையாளத்தின் முன்னணி இயக்குநரான பாசில் ஜோசப்புடன் (Basil Joseph) இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பாசில் ஜோசப், இப்போது அல்லு அர்ஜுனுக்காக ஒரு தரமான கதையைத் தயார் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த அல்லு சிரிஷின் (அல்லு அர்ஜுனின் தம்பி) திருமண விழாவில் பாசில் ஜோசப் கலந்துகொண்ட போதே இந்தச் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அப்போது அல்லு அர்ஜுன் மற்றும் பாசில் ஜோசப் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இப்போது இந்தத் தகவல் சினிமா வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் இந்தப் பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தை தயாரிக்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகின்றது.
மலையாள ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் மீது எப்போதும் ஒரு தனிப் பாசம் உண்டு. அவர்களைக் கவரும் வகையில் முதன்முறையாக ஒரு மலையாள இயக்குநருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை. இந்தப் படம் ஒரு சூப்பர் ஹீரோ கதையாக இருக்குமா? அல்லது ஒரு எமோஷனல் ஆக்சன் டிராமாவாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. ஏற்கனவே பாசில் ஜோசப், ரன்வீர் சிங்கை வைத்து ‘சக்திமான்’ படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இப்போது அந்தப் புராஜெக்ட் அல்லு அர்ஜுன் கைக்கு மாறியிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2027) தொடங்கும் எனத் தெரிகிறது. தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘AA22’ படத்தின் பணிகளை முடித்த பிறகு, அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இணைவார். கேரளா ஆடியன்ஸை டார்கெட் செய்து ஒரு தரமான கிராஸ் ஓவர் சம்பவத்தை செய்ய பாசில் ஜோசப் பிளான் போட்டுள்ளார். மலையாளத்தின் மேக்கிங் ஸ்டைலும், அல்லு அர்ஜுனின் மாஸும் இணைந்தால் பாக்ஸ் ஆபீஸில் புது வரலாறு படைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.













