செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் இதுகுறித்து வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி இருக்கின்றது. இது தொடர்பாக வானதி ஸ்ரீனிவாசன் எம்எல்ஏ கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது “தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் அனைவருக்கும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டே இருக்கின்றது. இப்போது இருக்கக்கூடிய திமுக அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது கிடையாது. அது அவர்களுடைய வரலாற்றில் இருக்கின்றது. திமுக அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டியோ வேறு விதமாக நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது.
செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். இதை ஸ்டாலின் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதை மனதில் வைத்து அரசு செயல்பட வேண்டும்.
செந்தில் பாலாஜி மாநில அரசின் ஆதரவை பெற்று அதிகாரம் மிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் செல்வாக்கு மிக்க பதவி வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை கலைப்பதற்கு பாதிக்கும்.
எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் போடப்பட்டிருக்கின்ற சிறு கருத்துக்கள் கூட இந்த அரசு அநீத நடவடிக்கைகளை எடுக்கின்றது. கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிற திமுக அரசுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகளை போட்டு திமுக அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது’ என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.













