மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வெளியாகி நல்ல பெயர் பெற்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிகர் த்ருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனா பிரச்சினை காரணமாக முடங்கியிருந்த சினிமாத்துறை தற்போது மெல்ல மீண்டு பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், த்ருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இயக்குநர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.







