2020 பிறந்தாலும் பிறந்தது இது போல ஒரு தரித்திரம் பிடித்த வருடத்தை இந்த தலைமுறையினர் மட்டுமல்ல சென்ற தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையும் என கடந்த மூன்று தலைமுறையும் கண்டதில்லை.
உலகத்தின் இருண்ட பக்கமாக இந்த 2020ஐ குறிப்பிடலாம். கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா என்ற பேரரக்கனால் முதன் முதலில் லாக் டவுன் போடப்பட்டது. வீட்டிலிருந்தே பலர் வேலை பார்க்கப்பட்டனர். ஆரம்பத்தில் வீடு, அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என வீட்டுக்குள்ளேயே சந்தோஷமாக இருந்த பலருக்கு போக போக அந்த வாழ்க்கை வெறுப்பாக தொடங்கியது.
மன நிம்மதியை பலர் இழந்தனர். அதிக மன அழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். மன நிம்மதியை அளிக்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியவில்லை. பொழுது போக்காக செல்லும் பார்க், பீச், தியேட்டர் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் டிவி, படம், தாயக்கட்டை, கேரம்போர்டு என பொழுதை போக்கினர்.
என்னதான் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் அடிக்கடி டிவி மற்றும் சமூக வலைதளங்களில் காண்பிக்கப்பட்ட கொரோனா ஸ்கோர்போர்டு மக்களை மிகவும் பயத்தில் ஆழ்த்தியது.
என்னதான் மக்கள் எச்சரிக்கையாக வாழ்ந்தாலும் கடந்த ஏப்ரல் , மே, ஜூன் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் நமக்கு தெரிந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டபோது நமக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. பலர் கொரோனாவில் இருந்து மீண்டாலும் பலர் மரணத்தை தழுவினார். இதை வாசித்து கொண்டிருக்கும் எல்லாருக்குமே அவரவர் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அதிர்ச்சியூட்டிய மரணங்கள் பல நடந்தேறி விட்டது.
இது போக சினிமா, ஆன்மிகம், அரசியல் என நாம் பார்த்து வியந்த பெருந்தலைகள், சிறுவயது சினிமா நடிகர்கள் பலர் இறந்தது ஏதோ அமானுஷ்யமான காட்டுக்குள் தனியாக செல்வதை போல பலருக்கும் பயம் கவ்வ துவங்கியது.
கொரோனாவே இல்லாமல் வேறு பல நோய்கள் மூலமாக மரணித்தவர்களும் 2020ல் அதிகம். எல்லோரும் வேலை இழந்து, சாலையோர தொழில்கள் நசிந்து, தினக்கூலிகள் பாதிக்கப்பட்டு கடும் அவல நிலைக்கு உள்ளாயினர்.
கடந்த 2 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பினாலும். இன்னும் முழுமையானதொரு மகிழ்ச்சியை மக்களிடத்தில் பார்க்க முடியவில்லை என்பது உண்மையாகும்.
இப்படி ஒரு துயரமான ஆண்டை மக்கள் எதிர்கொண்டிருக்கவே மாட்டார்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் வருட இறுதியை வழி அனுப்பி வைக்கும் மக்கள் கோபத்தில் வழி அனுப்பி வைத்து வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
இனி இப்படி ஒரு ஆண்டு வரவே வேண்டாம் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது. நாளை2021 முதல் அனைத்தும் நல்லவையாக நடக்கும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.













