தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனால் பல தனியார் மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. அந்த வகையில் கூகுளும் தனது பணியாளர்களை வீட்டிலிருந்து ஆன்லைனில் பணிபுரிய உத்தரவு பிறப்பித்திருந்தது.
பின்னர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன. தற்போது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பல நாடுகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி முதல் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பணிக்கு வரும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அந்நிறுவனம் விதித்துள்ளது.
செலுத்தாதவர்கள் ஜனவரி 18 முதல் 30 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதுவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். அதன் பின்னர் 6 மாதங்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கப்படும். அதன் பின்னரும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.













