தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகிய நிலையில் 10 வருடங்களுக்குப் பின் கைதி நம்பர் 150 என்ற திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்த படம் வெற்றி பெறவே அடுத்த படமாக சைரா நரசிம்மா ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடித்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்த படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரபல இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஆச்சார்யா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார். ஆனால் இப்போது படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் தனது கதாபாத்திரத்தை டம்மியாக்கி விட்டதாகக் கூறி அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படக்குழு வேறு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.







