தென்னிந்திய சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சந்தீப் கிஷன், தனது 33-வது திரைப்படத்திற்காக மீண்டும் ஒரு பிரம்மாண்டமான சோஷியோ-ஃபேண்டஸி (Socio-Fantasy) களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் ஆதி சாய்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஷம்பாலா’ (Shambhala) திரைப்படத்தின் அதே வெற்றிக் கூட்டணியுடன் சந்தீப் கிஷன் தற்போது கைகோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சந்தீப் கிஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ஷைனிங் பிக்சர்ஸ் (Shining Pictures) நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தை, ஷம்பாலா படத்தின் இயக்குனர் யுகந்தர் முனி இயக்கவுள்ளார். மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபமோஜு ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து பதிவிட்டுள்ள சந்தீப் கிஷன், “மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்ட்டை (Magical Script) என்னிடம் கொண்டு வந்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்தப் படம் ஒரு “கிரேஸி வைல்ட் ரைடு” (Crazy Wild Ride) ஆக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நம்முடைய புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு மிரட்டலான திரைக்கதையுடன் இப்படம் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கம், ஓநாய்கள், ராஜாக்கள் மற்றும் வாள்கள் என ஒரு ஃபேண்டஸி உலகிற்கே ரசிகர்களை அழைத்துச் செல்ல படக்குழு தயாராகி வருகிறது. ஏற்கனவே ‘ஊரு பேரு பைரவகோனா’ போன்ற ஃபேண்டஸி படங்களில் நடித்து அனுபவமுள்ள சந்தீப் கிஷனுக்கு, இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.
இன்று வெளியான இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாயாஜால போர்க்களத்தின் பின்னணியில், சீறும் சிங்கம் மற்றும் ஓநாய் ஆகியவற்றிற்கு இடையே ஒரு பழமையான வாள் தரையில் குத்தப்பட்டிருப்பது போன்ற அந்த போஸ்டர் மிகவும் மிரட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை.. சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” (Some wars never end. Some kings never die) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ஒரு புராணக்காலத்து மர்மங்கள் நிறைந்த கதையைச் சொல்லப்போவதை உறுதி செய்கிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் (Pre-production) பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 2026 முதல் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) ரீதியாகவும் இந்தப் படத்தை ஒரு சர்வதேச தரத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஷம்பாலா படத்தின் மூலம் ஒரு புதிய திரை அனுபவத்தைக் கொடுத்த இயக்குனர் யுகந்தர் முனி, இந்த முறை இன்னும் பிரம்மாண்டமான புராணக் பின்னணியைக் கையில் எடுத்துள்ளார்.













