இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பிரிட் ரிலீஸ் தேதி குறித்த தகவலை நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமின்றி சீனம், ஜப்பானியம் மற்றும் கொரியன் என மொத்தம் 8 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
சந்தீப் ரெட்டி வங்காவின் ‘அனிமல்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்தப் படத்தில், பிரபாஸ் முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், திரிப்தி டிம்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விலகிவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், விவேக் ஓபராய் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா எல்லையைத் தாண்டி பான்-வேர்ல்டு படமாக ‘ஸ்பிரிட்’ படத்தை உருவாக்கத் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் திட்டமிட்டுள்ளது. சர்வதேசச் சந்தையைக் குறிவைத்து 8 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்திய சினிமாவின் முக்கியமான மைல்கல்லாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸின் முந்தைய படங்களான ‘கல்கி 2898 AD’ மற்றும் ‘சலார்’ ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, 2027-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ஸ்பிரிட் உருவெடுத்துள்ளது.













