தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு நடந்து வருகிறது. நிறைய விசயங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதி செம்பிரான்குளம் மலை கிராமத்தில் (டிரக்கிங்) மலையேற்றம் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஜீப், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் பொய்யான காரணங்களைக் கூறி கொடைக்கானலுக்குச் சென்றுள்ளனர். மேலும் கொடைக்கானலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவியுடன் கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரான்குளம் கிராமத்தின் மலைமீது இளைஞர்கள் 10 பேர் டிரக்கிங்சென்றுள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
இதுகுறித்து வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஹரன், கோபிநாத், கொடைக்கானலைச் சேர்ந்த முத்து, ஆனந்த், வினோத் குமார், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.







