இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகள் முற்றிலும் உண்மையல்ல என்று நடிகர் தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இளையராஜா பயோபிக் இயக்குநர் மாற்றம் குறித்த வதந்திகள் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ‘கேப்டன் மில்லர்’ புகழ் அருண் மாதேஸ்வரனே இப்படத்தை இயக்குவார் என்று திட்டவட்டமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இது தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை. தற்போது அவர் இயக்கி வரும் லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ (DC) திரைப்படம் வெளியான பிறகு, திட்டமிட்டபடி பயோபிக் பணிகளைத் தொடங்குவார்; இது குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவிஸ் தயாரிக்கும் இப்படம் 2026 ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ கவனம் பெற்ற நிலையில், இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைத் திரையில் கொண்டுவரும் இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்குத் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.













