கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது பொது மக்களை கவலையடைய செய்துள்ளது. பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனத்தை வலுவாக சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதலை சொல்லி வந்தார்.
நேற்றைய தினம் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை கொண்டாடினார் விஜய். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை சொல்லியிருந்தனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு தனது வாழ்த்துக்களை சொல்லியிருந்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பண்பாட்டின் அடிப்படையில் தான் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருந்தார். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, அதே போல நிரந்தர நண்பனும் கிடையாது என்று கூறினார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விஜயின் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் இது பற்றி தேர்தல் நேரத்தில் தான் பதில் சொல்ல முடியும் என சொன்னார்.
விஜய் பொது சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். வாழ்த்து சொன்னதற்காக அது கூட்டணி அமைப்பதற்கான தூது என எண்ணிவிட கூடாது என தெளிவு படுத்தினார் ஜெயக்குமார். அதோடு அரசியலில் எதுவும் நடக்கலாம் என சொல்லி கூட்டணி பற்றிய சஸ்பென்ஸ் ஆவலை தூண்டி விட்டுள்ளார்.
சீமானுடன் விஜய் கூட்டணி அமைப்பர் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நேரத்தில் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.













