நடிகர் ரஜினி தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசை இல்லை என சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரான இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி அரசியலில் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் அறிக்கை:-
எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்தச் சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்குத் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாகக் கூட இருக்கலாம்.
ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்”







