கொரோனாவை முன்னிட்டு கடவுளா? அறிவியலா ? என்ற கருத்து மோதல் எழுந்துள்ளதை அடுத்து தமிழ் சினிமாவின் பிரபலங்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் ஒருபக்கம் இருக்கும் பகுத்தாறிவாளர்களுக்கும் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் இடையில் கருத்து மோதல் எழுந்துள்ளது.. தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்ராஜ் ‘கடவுள நூறு வருஷமா திட்டினோம்… இன்னைக்கு கடவுள் கதவை மூடிட்டாரு…. என்ன பண்ணுவோம் மனிதர்களே’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
நட்டியின் இந்த கருத்துக்கு முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றி படங்களின் இயக்குனர் ராம்குமார் ‘அன்பும் அறிவியலும் மட்டும்தான் வெற்றி பெறும்! 100 வருடங்களுக்கு முன்னாடியே வந்த பல கொள்ளை நோய்கள் அனைத்துக்கும் அறிவியல்தான் மருந்து கொடுத்துருக்கு. கடவுள் அல்ல!’ எனத் தெரிவித்துள்ளார்.








