விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட ‘குக் வித் கோமாளி’ (Cooku with Comali) நிகழ்ச்சி, தற்போது தனது 7-வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. கடந்த ஆறு சீசன்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த புதிய சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸாக முன்னணி நடிகையும், அரசியல் பிரமுகருமான ரோஜா செல்வமணி (Roja) புதிய நடுவராக இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், ஏற்கனவே இருக்கும் நடுவர்களான செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் கௌஷிக் ஆகியோர் ஏதோ ஒரு போராட்டத்தில் ஈடுபடுவது போலவும், அவர்களைச் சமாதானம் செய்ய 4-வது நடுவராக ரோஜா அதிரடியாக உள்ளே நுழைவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜா ஒரு தமிழ் ரியாலிட்டி ஷோவில் நடுவராகப் பங்கேற்பது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘ஜெபர்தஸ்த்’ போன்ற தெலுங்கு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த அனுபவம் ரோஜாவிற்கு இருப்பதால், குக் வித் கோமாளி செட்டிலும் அவரது கலகலப்பான பேச்சுக்குக் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
இந்த சீசன் 7-க்கு ‘டபுள் ட்ரபுள்’ (Double Trouble) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த முறை சமையல் கலைஞர்களாக (Cooks) பங்கேற்பவர்கள் நிஜ வாழ்க்கை ஜோடிகளாக (Real-life Couples) இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவி அல்லது காதலர்களாக இருக்கும் பிரபலங்கள் சமையல் செய்ய, அவர்களுக்கு உதவியாக கோமாளிகள் செய்யும் லூட்டிகள் இந்த முறை இரட்டிப்புத் தொல்லையாகவும், இரட்டிப்புச் சிரிப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொகுப்பாளர் ரக்ஷன் இந்த சீசனிலும் தனது கலகலப்பான தொகுப்பால் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகிவிட்டார்.
கோமாளிகள் வரிசையில் மணிமேகலை, சுனிதா, புகழ் மற்றும் புதிய வரவான ஷாலின் ஜோயா ஆகியோர் இணைந்துள்ளனர். கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த ஷாலின் ஜோயா, இந்த முறை கோமாளியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மணிமேகலை மற்றும் குரேஷி ஆகியோரின் நகைச்சுவை கலாட்டாக்கள் இந்த சீசனிலும் தொடரும். அதேபோல், போட்டியாளர்களாகப் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்னும் சில தினங்களில் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி சீசன் 7-ன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கும் என்று விஜய் டிவி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடுவர் ரோஜாவின் வருகை இந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பி ரேட்டிங்கை இன்னும் உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் குடும்பத்தோடு சிரித்து மகிழக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ‘டபுள் ட்ரபுள்’ சீசன் ஒரு சிறந்த விருந்தாக அமையும்.













