தென்னிந்தியத் திரையுலகின் எவர்கிரீன் குயினாக வலம் வரும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரபல சினிமா பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போடப்போகிறார் எனக் கூறியது இந்த வதந்தியைத் தீயாகப் பரப்பியது.
இந்த வதந்திகளுக்கு தற்போது திரிஷா தனது ஸ்டைலில் செம்ம மாஸாகப் பதிலடி கொடுத்துள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், “நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டேன், எனக்கு இரண்டு வயதில் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்! இன்று உங்களுடைய கற்பனை கோட்டா முடிந்துவிட்டதா அல்லது இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?” என மிக நக்கலாகக் கேட்டுள்ளார்.
இந்த ஒற்றைப் பதிவின் மூலம் கடந்த சில நாட்களாகத் தன்னைச் சுற்றிப் பரவிய அனைத்து வதந்திகளுக்கும் திரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் தளபதி விஜய்யுடன் திரிஷா ஜோடியாகக் கலந்துகொண்டது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. ஏற்கனவே விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகள் வந்த நிலையில், திரிஷாவின் இந்த வருகை வதந்திகளுக்கு உரம் போட்டது. அதன் தொடர்ச்சியாகவே அவர் சினிமாவிற்கு முழுக்கு போடுகிறார் என்ற செய்திகளும் பரப்பப்பட்டன. ஆனால் திரிஷா இப்போது அதனைச் சிரித்துக் கொண்டே கடந்துள்ளார்.
உண்மையில் திரிஷாவின் கைவசம் தற்போது மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக உள்ளன. சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள விஸ்வம்பரா திரைப்படம் வரும் ஜூலை 10-ம் தேதியும், சூர்யாவுடன் நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14-ம் தேதியும் வெளியாகவுள்ளன. கடந்த ஆண்டு ‘தக் லைஃப்’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த திரிஷா, இன்னும் பல பான்-இந்தியா படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.
திரிஷாவின் இந்தப் பதிலடி அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
42 வயதிலும் முன்னணி நாயகியாக நிலைத்து நிற்கும் திரிஷாவை வீழ்த்தவே இது போன்ற வதந்திகள் கிளப்பப்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு திரிஷாவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், அவர் இப்போதைக்கு ஓய்வு எடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. வதந்திகளைப் பரப்பியவர்களுக்குத் திரிஷா கொடுத்த இந்த ‘நச்’ பதிலடி தான் இப்போதைய டாப் ட்ரெண்டிங்.













