தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் தனது பின்னணி இசையால் மிரட்டி வருபவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் (Sam CS). தற்போது இவர் தனது அடுத்த மைல்கல்லாக, மிகவும் எதிர்பார்க்கப்படும் புராணத் திரைப்படமான ‘மகாஅவதார் பரசுராம்’ (Mahavatar Parshuraam) படத்திற்காக ஒரு மாபெரும் இசைப் புரட்சியில் ஈடுபட்டுள்ளார்.
பொதுவாகப் படங்களுக்குத் தான் இசை அமைக்கப்படும், ஆனால் இந்தப் படம் சாம் சிஎஸ்ஸின் இசையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்துள்ளார். சாம் சிஎஸ். சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு காவிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.
“ஒரே கூரையின் கீழ் 250 கலைஞர்கள்” – சாம் சிஎஸ்ஸின் உலகளாவிய இசைப் பயணம்:
இந்தத் தகவல், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புராண காலத்தின் உணர்வுகளையும், நவீன காலத்தின் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமையவுள்ளது.

மேலும், சாம் சிஎஸ்ஸின் இந்த அதிரடி அப்டேட் சினிமா உலகை வியக்க வைத்துள்ளது. ஒரு படத்தின் இசைக்காக மேற்கொள்ளப்படும் இந்த பிரம்மாண்ட முயற்சி தனித்துத் தெரிகிறது. மகாஅவதார் பரசுராம் படத்தின் இந்த இசைப் பணிகள் முடிவடைந்து விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாஅவதார் பரசுராம் (Mahavatar Parshuraam) திரைப்படம் வரும் டிசம்பர் 2027-ல் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.












