ஈழப்போர் என்பது வெறும் நிலத்திற்கான போர் மட்டுமல்ல; அது பல கோடி மக்களின் ரத்தமும் கண்ணீரும் கலந்த வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு கசப்பான பக்கத்தை, அதாவது 1987-ல் இலங்கையில் இந்திய அமைதிப்படை (IPKF) நிலை கொண்டிருந்த காலகட்டத்தை மையமாக வைத்து ‘நீளிரா’ (Neelira – A Long Night) திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சோமீதரன். ஒரு பக்கம் சிங்கள அரசு, இன்னொரு பக்கம் இந்திய அமைதிப்படை என இருமுனை நெருக்கடிக்கு மத்தியில் சிக்கிய தமிழ் மக்களின் வலியை இந்தப் படம் பேசுகிறது.
போர்க்களத்தில் ஒரு கொண்டாட்டம்… வட இலங்கையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மகளின் திருமணத்திற்காக ஒரு குடும்பம் தயாராகிறது. வாசலில் போர் முழங்கிக்கொண்டிருக்க, வீட்டிற்குள் ஒரு மங்கல நிகழ்வு நடக்குமா? என்ற கேள்வி தான் படத்தின் கரு. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே, தனது வீட்டில் திருமணம் நடத்த ராணுவத்திடம் அனுமதி கேட்கும் தந்தையின் நிலை, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிசையும். நாம் கொரோனா காலத்தில் ஊரடங்கின் போது அனுமதி வாங்கிக் கல்யாணம் செய்ததை ஒரு பெரும் கஷ்டமாக நினைத்தோம். ஆனால், ஈழத்தில் இது பல தசாப்தங்களாக இயல்பான ஒன்றாக இருந்தது என்பதை இந்தப் படம் உணர வைக்கிறது.
படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவயூர் மற்றும் ரோஹித் காகடே என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக, ஐபிகேஎஃப் (IPKF) அதிகாரிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மிகவும் கூர்மையானவை. தமிழ் பேசும் அதிகாரிகள் மற்றும் ஹிந்தி பேசும் அதிகாரிகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும் இயக்குனர் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
பாப் கலாச்சாரமும் அரசியலும்… 80-களின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நடிகர் விஜயகாந்திற்கு இருந்த பிரம்மாண்டமான வரவேற்பை ஒரு பாப் கலாச்சார குறியீடாகப் படத்தில் காட்டியிருப்பது சுவாரஸ்யம். நீதிக்காகப் போராடும் விஜயகாந்தின் படங்கள், தங்களது அரசியல் விடுதலைக்கு ஒரு வடிகாலாக இருந்ததை மக்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை இயக்குனர் அழகாக விளக்கியுள்ளார். திருமண வீட்டின் கொண்டாட்டங்களுக்கு இடையே இழைந்தோடும் அந்த அமைதியான சோகம், தமிழ் சினிமா வழக்கமாகச் சித்தரிக்கும் வண்ணமயமான திருமணங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
இருப்பினும், ஈழ அரசியல் மற்றும் ஐபிகேஎஃப் குறித்த ஆழமான புரிதல் இல்லாதவர்களுக்குப் படத்தின் சில இடங்கள் புரியாமல் போக வாய்ப்புள்ளது. பல கதாபாத்திரங்கள் உரையாடல்கள் மூலமே மோதிக்கொள்வது சில இடங்களில் ஒரு நாடகத் தன்மையைத் தருகிறது. படத்தின் கால அளவு குறைவாக இருப்பதால், சில மாற்றங்கள் (Transformations) செயற்கையாகத் தெரிகின்றன. இயக்குனர் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைச் செதுக்கியிருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக, ‘நீளிரா’ எளிதான விடைகளையோ அல்லது ஒரு முழுமையான முடிவையோ தருவதில்லை. மாறாக, நம்மை ஒரு சங்கடமான இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த வரலாற்றை மறக்காமல் இருக்கச் செய்கிறது. ஈழத் தமிழர்களின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சிக்கும் இந்த ‘நீளிரா’, சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாக அமையும்.













