இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்ஐகே’ (Love Insurance Kompany) திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமையவுள்ளது. இந்தத் திரைப்படம் 2040-ஆம் ஆண்டின் எதிர்கால உலகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு ‘ஃபியூச்சரிஸ்டிக் ஃபன் ரோம்-காம்’ (Futuristic Fun Rom-com) திரைப்படமாகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மனித உணர்வுகளை எவ்விதம் ஆக்கிரமிக்கும்? என்பதை ஒரு நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான பின்னணியில் இந்தத் திரைப்படம் விவரிக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் உலகத்தையே ஒரு புதிய கோணத்தில் அணுகுகிறது. 2040-ஆம் ஆண்டில் மனிதர்கள் தங்களது விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் உயிருக்கு காப்பீடு செய்வது போல காதலுக்கும் காப்பீடு செய்யும் ஒரு சூழல் நிலவுகிறது. ஒரு முன்னணி நிறுவனம் காதலைக் காப்பீடு செய்யத் துணிகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக செயலி (App), மனிதர்களின் உறவுகளில் ஏற்படக்கூடிய விரிசல்ககளை முன்கூட்டியே கணிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உறவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுகிறது.
திரைப்படத்தின் நாயகன் இந்த காப்பீட்டு நிறுவனத்தின் பின்னணியில் இருக்கும் குரலாகச் செயல்படுபவர். காதலை வெறும் தகவல்களாகவும், கணக்கீடுகளாகவும் மட்டுமே பார்க்கும் அவர், ஒரு கட்டத்தில் தனது சொந்த வாழ்க்கையிலும் அதே உணர்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதுவரை மற்றவர்களின் காதலை ஒரு வணிகமாகப் பார்த்த அவருக்கு, சொந்த அனுபவம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் சொல்லும் கணக்குகளுக்கும், இதயத்தின் துடிப்புக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் தொடங்குகிறது.

இந்தச் சூழலில் அந்தத் தொழில்நுட்ப அமைப்பு, நாயகனின் சொந்தக் காதலையே ஒரு தோல்வியடைந்த உறவு என அடையாளப்படுத்துகிறது. அந்தச் செயலி அவரது காதலை முறிக்கத் திட்டமிட்டு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்யத் தொடங்குகிறது. அப்போதுதான் அந்த செயலி வெறும் கணிப்புகளை மட்டும் செய்யவில்லை, மாறாக மனிதர்களின் காதலைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கிறது (Manipulation) என்ற அதிர்ச்சிகரமான உண்மை அவருக்குத் தெரியவருகிறது. உலகம் முழுவதும் நம்பும் ஒரு பலமான தொழில்நுட்ப அமைப்பிற்கும், தனது இதயத்தின் குரலுக்கும் இடையே நாயகன் எடுக்கும் முடிவே படத்தின் மீதிக்கதையாக அமையவுள்ளது.
நவீன கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப பிரதீப் ரங்கநாதனின் அசாத்தியமான நகைச்சுவை உணர்வும், விக்னேஷ் சிவனின் உணர்ச்சிகரமான இயக்கமும் இணையும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அனிருத் ரவிச்சந்தரின் இசை இந்த ஃபியூச்சரிஸ்டிக் உலகத்திற்கு ஒரு தனித்துவமான ஒலியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் மனித உணர்வுகளின் தூய்மையே இறுதியாக வெல்லும் என்ற கருத்தை இந்தப் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகி, அறிவியலில் கற்பனை கதையை புகுத்தி, மேலும், நகைச்சுவையை இணைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘எல்ஐகே’ திரைப்படம் 2040-ஆம் ஆண்டின் கற்பனை உலகை நேர்த்தியாகத் திரையில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.













