“கில்லி” ரீ-ரிலீஸ்க்கு பிறகு பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படங்களின் மீது திரும்பியுள்ளது கோலிவுட்டின் பார்வை. ‘2024’ துவங்கியதிலிருந்தே சொல்லிக்கொள்ளும் அளவிலான படங்கள் வரவில்லை என்பது ஒரு பக்கம். வெளிவந்த படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என மறுபக்கம்.
தயாரிப்பில் லைன் கட்டி காத்து கொண்டிருக்கும் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா படங்கள் என இந்த வருட இறுதி வரை பட்டியல் நீளப்போகும் நிலையும் இருக்கிறது. கோடை விடுமுறை நேரத்தில் சரியான கணக்குப்போட்டு கபடி, கபடி என சொல்லி மீண்டும் வெளிவந்தது விஜயின் ‘கில்லி’. வேலுவை பார்க்க கூடிய கூட்டத்தை பார்த்து ஸ்தம்பித்து போனது தமிழ் சினிமா.
அப்புறம் என்ன அடுத்து தங்களது பழைய வெற்றி படங்கள் எதையயெல்லாம் வெளியிடலாம் என யோசிக்கத்துவங்கினர் தயாரிப்பாளர்கள். அஜீத்தின் “தீனா” ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இனி சும்மா இருப்பார்களா? மற்ற கதாநாயகர்களின் ரசிகர்கள், எங்கள் “ஃபேவரட்” ஹீரோக்களின் எந்த படத்தையெல்லாம் ரீ-ரிலீஸ், எப்போ பண்ணப்போறீங்க? என கேள்வி கேட்கத்துவங்கிவிட்டனர்.

ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படமான “படையப்பா” வை ரீ-ரிலீஸ் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அது ரஜினிகாந்தின் ‘அருணாச்சலா சினி கிரியேசன்ஸ்’ எடுத்த படம் . அதை வெளியிடுவது பற்றி ரஜினி தான் முடிவு செய்ய முடியும் என்றிருக்கிறார்.
ஆனால் கமல், ஜோதிகா, ஜெயராம், தேவயானி நடித்த “தெனாலி” படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் நானே தான். அதனால் அதனை நவீன தொழில்நுட்பம் கலந்து வெளியிட முடியும். அது பற்றி சீக்கிரத்தில் முடிவு எடுக்க உள்ளதாக சொல்லியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.








