நமது சமூகத்தில் ஒருவரது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தேர்வுகளும் மதிப்பெண்களும் எவ்வளவு பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. குறிப்பாக, சமூகப் படிநிலையின் கடைக்கோடியில் இருக்கும் எளிய மக்கள், அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பிற்குச் செல்ல இருக்கும் ஒரே ஏணி ‘கல்வி’ மற்றும் ‘போட்டித் தேர்வுகள்’. இந்த ஏணியிலேயே முறைகேடுகள் நடந்தால்? இந்தத் தீராத வலியை மையமாக வைத்து, இயக்குநர் ஏ. சற்குணம் அமேசான் பிரைம் வீடியோவிற்காக உருவாக்கியுள்ள தொடர் தான் ‘எக்ஸாம்’ (Exam).
துஷாரா விஜயனின் மிரட்டலான ஆள்மாறாட்டத்துடன் தொடங்கும் இந்தத் தொடர், முதல் சில நிமிடங்களிலேயே நம்மை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது. எஸ்பி மரமல்லியாக (அதிதி பாலன்) பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் ஜான்சி (துஷாரா விஜயன்) நுழைகிறார். குரூப் 1 தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க அவர் அமைக்கும் அந்த ரகசியக் குழு, ஊட்டி மலையின் பின்னணியில் ஒரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக ‘தேர்வுக்கு முன்’ நடக்கும் அந்தப் பின்னணி வேலைகள் மற்றும் போலீஸ் நடைமுறைகள் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளன.
View this post on Instagram
விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் சற்றே வேகம் குறைந்து தடுமாற்றத்தைச் சந்திக்கிறது. கதை ஜான்சியின் ஃப்ளாஷ்பேக்கிற்குள் நுழையும்போது, அந்த வேகமும் கூர்மையும் சட்டெனக் குறைகிறது. ஆள்மாறாட்டக் காட்சிகள் ஆரம்பத்தில் புதுமையாகத் தெரிந்தாலும், அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருப்பது ஒரு கட்டத்தில் கதையோட்டத்தைத் தொய்வடையச் செய்கிறது. ஜான்சி தனது இலக்கை நோக்கி நகரும் விதம், ஒரு த்ரில்லருக்குத் தேவையான லாஜிக் மற்றும் சுவாரசியத்தில் சற்றே சறுக்குகிறது.
வில்லன் கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் பலமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால், இந்த ‘எக்ஸாம்’ அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கும். ஒரு மிகப்பெரிய போட்டித் தேர்வில் நடக்கும் முறைகேடு என்பது வெறும் சில நபர்களின் தனிப்பட்ட விருப்பமாக மட்டும் இருக்க முடியாது. அதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தைச் இன்னும் ஆழமாகக் காட்டியிருக்கலாம். விறுவிறுப்பாகத் தொடங்கிய தொடர், இறுதியில் பழைய பாணி சண்டைக் காட்சிகள் மற்றும் வழக்கமான தொழில்நுட்ப உத்திகளை நம்பி இருப்பது சற்றே பின்னடைவு.
இருப்பினும், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பிற்காகவும், சமகாலத்தின் ஒரு மிக முக்கியமான பிரச்சினையைக் கையில் எடுத்ததற்காகவும் இயக்குநர் சற்குணத்தைப் பாராட்டலாம். சில எபிசோட்களைக் குறைத்து, இன்னும் கொஞ்சம் நெருக்கமான திரைக்கதையை அமைத்திருந்தால், இந்தத் தொடர் தமிழ் ஓடிடி தளங்களில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும். சமூக நீதி சார்ந்த அரசியலைப் பேசுவதால், இந்த வாரம் ஒருமுறை பார்க்க வேண்டிய தொடராக ‘எக்ஸாம்’ அமைகிறது.











