தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் புதிய அமைச்சரவையில், திரைப்படத் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்ட விவகாரம் தற்போது கோலிவுட் முன்னணி நடிகர்களுக்கு இடையேயான நேரடி மோதலாக மாறியுள்ளது. அமைச்சர் நியமனம் குறித்து நடிகர் விஷால் இன்றைய தினம் எக்ஸ் (X) தளத்தில் பகிரங்கமாகத் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அருண் விஜய் (Arun Vijay) மிகவும் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Win your trust with people, get elected and do as you wish.. kindly do not intervene with decisions.. Being a fraternity from the industry, I’m sure he knows our problems and surely will help us out.. kindly let his decisions be respected and wait for an outcome.. Let’s not come…
— ArunVijay (@arunvijayno1) May 17, 2026
“மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதற்குப் பிறகு உங்களுக்குத் தோன்றியதைச் செய்யுங்கள்” என்று விஷாலுக்கு அருண் விஜய் நேரடியாகப் பதிலடி தந்துள்ளார். முதல்வர் மற்றும் அமைச்சரின் முடிவுகளில் தேவையின்றி யாரும் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், “நமது முதலமைச்சர் இதே திரையுலகின் அடிமட்டத்திலிருந்து வந்தவர் என்பதால், நமது சினிமாத் துறையின் பிரச்சனைகள் அவருக்கும் நன்றாகத் தெரியும், அவர் நிச்சயம் நமக்கு உதவுவார்” என்று முதல்வர் விஜய் மீதான தனது முழு நம்பிக்கையைப் பதிவு செய்துள்ளார்.
அரசின் முடிவுகளுக்குக் கண்ணியம் கொடுத்து, அதன் முடிவுகளைக் கூர்ந்து கவனித்துத் காத்திருக்க வேண்டும் என்று அருண் விஜய் அறிவுறுத்தியுள்ளார். “தயவுசெய்து முதலமைச்சரின் முடிவுகளை மதித்து, அதன் முடிவுகளுக்காக நாம் காத்திருப்போம். அதற்குள் நாமாக எந்த ஒரு முடிவிற்கும் (Conclusions) வந்துவிட வேண்டாம். எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்” என்று விஷாலின் அவசரக் குற்றச்சாட்டுகளுக்குத் தனது எக்ஸ் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.

ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்கள், புதிய தவெக அரசின் முடிவுகளை ஒட்டி சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. விஷால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகின் தற்போதைய நிலையை முன்வைத்து அமைச்சரின் அனுபவக் குறைவைச் சாடியிருந்த நிலையில், அருண் விஜய் அதற்குப் பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துப் புதிய அரசுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். இதனால் இந்த ‘இலாகா ஒதுக்கீடு’ சர்ச்சை தற்போது சினிமா வட்டாரத்தையும் தாண்டி அரசியல் மேடைகளிலும் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.













