‘கே.ஜி.எஃப்’ படங்களுக்குப் பிறகு கன்னட திரையுலகின் அடையாளமாக மாறியுள்ள நடிகர் யஷ், தற்போது ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தில் நடித்து வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் டிரமாவாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மற்ற ஆக்ஷன் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என யஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் படங்கள் என்றாலே ஆண் இயக்குநர்களின் கைகளிலேயே இருக்கும் நிலையில், ஒரு பெண் இயக்குநரின் பார்வையில் இந்தத் தளம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் உறுதியாக இருப்பவர் எனப் பாராட்டிய யஷ், “காதல், எமோஷன் மற்றும் கவர்ச்சி ஆகியவற்றை ஒரு பெண் இயக்குநர் கையாளும் விதம் முற்றிலும் வித்தியாசமானது என்பதை ‘டாக்ஸிக்’ படத்தில் நான் உணர்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படங்கள் ஆண் இயக்குநர்களுக்கானது மட்டுமே என்கிற பிம்பத்தை இந்தப் படம் உடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் அதே வீரியம், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் ஒரு புதிய கோணத்தில் இருக்கும் என்பதே ‘டாக்ஸிக்’ படத்தின் மிகப்பெரிய பலம். இதில் நயன்தாரா, யஷின் சகோதரியாக நடிக்கிறார் என்பதும், கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 10, 2026 அன்று வெளியாகவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் படங்களுக்கு ஒரு புதிய ‘ஃபீமேல் கேஸ்’ (Female Gaze) அடையாளத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யஷின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.













