மாதச் சம்பளம் வந்த மறுநிமிடமே EMI-களுக்கும், பில்களுக்கும் எனப் பிரிந்து போய், கூகுள் பே-யின் அந்த சத்தம் பலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் காலத்தில், ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் அப்படியே நம் வாழ்க்கையைத் திரையில் பிரதிபலிக்கிறது. இயக்குனர் ராம சக்ரி இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் லெட்சுமி பிரியா சந்திரமௌலி நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம், நாம் ஓடிக்கொண்டிருக்கும் பணப்பந்தயம் உண்மையில் அவசியமானதா என்ற கேள்வியை மிக அழுத்தமாக முன்வைக்கிறது.
எதார்த்தமான கதைக்களம்… டிரைவராக வேலை பார்க்கும் செல்வம் (சமுத்திரக்கனி), தெருவோரம் கடை வைத்திருக்கும் சாந்தி (லெட்சுமி பிரியா) ஆகியோரின் நடுத்தர வர்க்க வாழ்க்கை தான் படத்தின் கரு. ஆரம்பத்தில் ஒரு சின்ன வீட்டில் மனநிறைவோடு வாழும் செல்வம், சமூகத்தின் அழுத்தத்தால் பணத்தாசைக்கு ஆளாகிறார். சொந்த பந்தங்களின் விசேஷங்களில் செய்யப்படும் ‘சீர்’ முறைகள், கௌரவத்திற்காகச் செய்யப்படும் செலவுகள் என ஒரு சாதாரண குடும்பம் எப்படிச் சிதைகிறது என்பதைப் படம் உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது.
படத்தில் சமுத்திரக்கனி தனது வழக்கமான மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், அமைதியான அதே சமயம் ஆழமான நடிப்பால் லெட்சுமி பிரியா மொத்தப் படத்தையும் திருடிச் செல்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். செல்வத்தை (பணம்) தேடி ஓடும்போது சாந்தியை (நிம்மதி) இழக்கிறோம் என்பதை இயக்குனர் இந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் மூலமே அழகாகக் கடத்தியுள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அபினயா இருவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர், ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
கருத்து மழையும்.. மெதுவான திரைக்கதையும்… படத்தின் நோக்கம் மிகவும் நேர்மையானது. நாம் வாங்கும் EMI பொருட்கள் உண்மையிலேயே நமக்குத் தேவையானதா? குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பது அறமற்ற பாதைக்கு இட்டுச் செல்லுமா? போன்ற கேள்விகளைப் படம் நம்மிடம் கேட்கிறது. “வெள்ளையா இருந்தா சம்பாதிக்க முடியாதுப்பா” போன்ற வசனங்கள் சமூகத்தின் கசப்பான உண்மையை நச்சென்று சொல்கின்றன. சிறுவன் கரன் சக்ரவர்த்தியின் நடிப்பு படத்திற்கு ஒரு கூடுதல் பலம்.
இருப்பினும், படத்தின் திரைக்கதை மிகவும் கணிக்கக்கூடியதாக (Predictable) இருப்பது ஒரு பலவீனம். முதல் காட்சியிலேயே கதை எங்குப் போகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. சில இடங்களில் படம் கொஞ்சம் ‘அட்வைஸ்’ செய்வது போலத் தோன்றுவதும், வறுமையை மிகவும் அழகியல் தன்மையுடன் காட்டியிருப்பதும் (Glorifying Poverty) விவாதத்திற்குரியது. ஆனால், நடுத்தர வர்க்கத்தின் வலியைச் சொல்லும் படங்களில் இது நிச்சயம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.
ஒட்டுமொத்தமாக, ‘கார்மேனி செல்வம்’ ஒரு தரமான படைப்பு. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர வைக்கும் ஒரு பாடம். நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதராக இருந்தால், இந்தப் படம் உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.













