இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்தும் இயக்கியும் வெற்றிபெற்றவர் லால். தமிழில் சண்டக்கோழி, எங்கள் அண்ணா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பார்.
சமீபத்தில் வந்த கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இப்படத்தில் ஏமராஜா என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் அவர் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை. இதுகுறித்துப் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
” ‘கர்ணன்’ படத்தில் ஏமராஜா பாத்திரத்துக்கு ஏன் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். ‘கர்ணன்’ படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. மலையாளத்தில் கூட திருச்சூர் வட்டார மொழியை ஒருவர் பேச முயன்றால் அதன் அருகில் கூட நெருங்க முடியாது.
‘கர்ணன்’ மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு திரைப்படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி”.







