பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியால் இவர் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். இவர் தற்போது நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க இருக்கிறார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று இதனை துருவ் விக்ரம் உறுதி செய்தார். தானும் மாரி செல்வராஜும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம், அவருடன் இணையவுள்ளதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். இப்படம் விளையாட்டை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் பா. ரஞ்சித் இதனை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.







