இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் நல்ல உடல்நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதுகாப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதை டிவிட்டரில் அறிவித்த அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல்நிலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.