தக்காளி விலை உயர்வை முன்னிட்டு பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தக்காளி விலை தற்போது கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 50 முதல் 70 ரூபாய் வரை அதிகரித்து விற்பனையாகி வருகின்றது. அதிலும் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
மொத்த மார்க்கெட்டில் இந்த விலை வெளிச்சந்தையில் மற்றும் சில்லறை கடைகளில் 70 முதல் 100 வரை விற்பனையாகி வருகின்றது. அதேபோல் வெங்காயம் விலையும் கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் அதிக மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் தமிழகத்திற்கு வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக இருக்கின்றது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். வெங்காயம், தக்காளி விலை உயர்ந்திருப்பதால் அவற்றை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்து பண்ணை பசுமை கடைகளில் தமிழக அரசு விற்பனை செய்து வருகின்றது.
அதன்படி கடைகளில் வெங்காயம் கிலோ 55 வரை விற்பனையாகி வருவதால் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. தக்காளி விலை வெளிச்சந்தையில் 70 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில் தக்காளி கிலோ 60க்கு விற்பனையாகி வருகிறது. அதன் படி அதிகபட்சம் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.