சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்திருக்கின்றது.
கடந்த ஜூலை மாதம் தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையானது. இது நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தங்கம் என்பது பலருக்கும் எட்டாக்கனியாகிவிடும் என்று எண்ணத் தோன்றியது.
இதையடுத்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய நிதி மாதிரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இது நகைப் பிரியர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.53,360-க்கும், ஒரு கிராம் ரூ.6,670-க்கும் விற்பனையாகி வந்தது. நேற்று தங்கம் அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையானது, ஆபரண தங்கம் கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து 6,720 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 92 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரை குறைந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 440க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 6,680 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 89 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.