தமிழகத்தில் நடைபெறுவதற்கு பெயர் திராவிட மாடலா? இல்லை ராமர் மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பி இருக்கின்றார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் அய்யா ஈ ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என நம்பிக்கொண்டிருக்கையில் நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல, பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள் என்று திமுக அரசின் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றார்.
திமுகவின் சட்ட அமைச்சரே இப்படி கூறியிருப்பது தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எவ்வித மறுப்பும் தெரிவிக்காதது, திமுக அரசு அதை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றது என்பது உறுதியாக்கிவிட்டது. சொர்க்கத்தில் வாழ்வதைப் போன்ற பொற்கால ஆட்சியை தந்தார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அப்படி ஒரு ஆட்சி தான் தற்போது தமிழ்நாட்டின் நடைபெற்று வருகின்றதா? பட்டப் பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்து கொத்தாக கள்ளச்சாராயம் மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், பொங்கல் புலியில் பல்லி, சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை ஜாதிய மோதல் இதெல்லாம் தான் ராமரின் ஆட்சியா? என்று சீமான் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.