தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கின்றது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “நாளை 30ஆம் தேதி முகூர்த்த நாள் மற்றும் சனிக்கிழமை 31ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1ஆம் தேதி வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 355 பேருந்துகளும், சனிக்கிழமை 360 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.
மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 75 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 75 பேருந்துகளும் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
அதேபோல நாளை மாதாவரத்தில் இருந்து 20 பேருந்துகளும், நாளை மறுநாள் 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றது. விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.