நெல்லையில் புரட்டாசி மாதர் சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சென்று வர போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28 மற்றும் அடுத்த மாதம் 5 ,12 தேதிகளில் நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது. இதற்கு ஏற்ற ஏற்பாடுகளை நெல்லை மண்டலம் போக்குவரத்து கழகம் செய்திருக்கின்றது.
இந்த சிறப்பு பேருந்துகள் புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்காக முன் பதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பேருந்து நிலையம் தென்காசி மற்றும் சங்கரன்கோயில் பேருந்து நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அல்லது அரசு போக்குவரத்து கழக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்திருக்கின்றார்.