வீடுகளுக்கே மதுவை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உள்ளிட்ட குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட மது வகைகளை Swiggy, zomato நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். வீடுகளுக்கு சென்றும் மதுவை விற்பனை செய்வது என்பது மக்களின் நலனை பாதிக்கக்கூடிய ஒரு விஷயம்.
தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம் விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் மது வகைகளை விநியோகித்தல், மது கடைகளில் காகித குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்த பல புரட்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்ய துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உள்ளது.
அதனால் தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ என்று நம்ப தோன்றுகின்றது. மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல். போதை குறைந்த மது வீடுகளுக்கு விற்பனையாவது வீடுகளில் உள்ள குழந்தைகளையும் பெண்களையும் பாதிக்கும். பெண்களும் இதை சுவைத்து பார்க்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.
காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களும், பிள்ளைகளும் மதுவுக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மது வகைகளை வீட்டிலேயே சென்று டோர் டெலிவரி செய்யும் விற்பனை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தை செய்வோம் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.