சென்னையில் நேற்று மணலில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இது குறித்து மின்வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

சென்னை மணலியில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் 400க்கு 23 கிலோ வாட் மின்சார பாதையிலும் திடீர் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின்வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உரைவு அதை தொடர்ந்து எழுந்த தீப்பொறிகளுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்த பழுதின் எதிரொலியால் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, நந்தனம், பெருங்குடி, தியாகராய நகர், சூளைமேடு, வில்லிவாக்கம் , அயப்பாக்கம், திருமுல்லைவாயில், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கினர்.

வடசென்னை பகுதிகள் முழுவதுமே இருளில் மூழ்கியது. இதனால் நேற்று இரவு தூக்கத்தை தொலைத்து மக்கள் திண்டாடி வந்தார்கள். அனைவரும் மின் நிலையங்களுக்கும், மின்னக கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து வந்தார்கள். முக்கியசாலைகளும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை மயிலாப்பூர் இடையேயான பறக்கும் ரயில் நிலையங்கள் அனைத்துமே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கியது. இருள் சூழ்ந்திருந்தது காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கின பயணிகள் செல்போன் வெளிச்சத்திலேயே ரயில்களை பயணம் செய்தார்கள். சில மணி நேரத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டது. மின்வெட்டால் நேற்று இரவு மக்கள் கடுமையாக பாதிப்படைந்தார்கள் .

இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது ‘அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் மின் ஆதாரங்கள் செயல் இழந்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. சென்னையில் ஏற்பட்ட மின்தடை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% சரி செய்யப்பட்டு இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

By ramya